அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் திருப்போரூர்

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் திருப்போரூர்

மீனாட்சி அம்பாள் :

ஒருமுறை சிதம்பர சுவாமிகள் தியானத்தில் அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி, ‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் உள்ளது. அங்கே குமரக் கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்து. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருளி மறைந்தார்.மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்து, யுத்தபுரி, சமராபுரி, போரிநகர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்போரூரை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அப்போது அங்கு ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் மட்டுமே இருந்தது. மற்ற பகுதிகள் பனங்காடாக காணப்பட்டது. அந்தப் பகுதியில் முருகப்பெருமான் திருவுருவத்தை தேடித்திரிந்தார். இறுதியில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.

திருப்போரூர் திருக்கோவில் சிறப்புகள்

தந்தை ஈசனைப் போலவே இங்கே சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர் கந்தபெருமான் என்கிறது ஸ்தல புராணம். எனவே, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் இல்லை. மாறாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்துக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.இந்த யந்த்ரத்தில் கந்தக் கடவுளின் திருநாமங்கள் சுமார் 300&க்கும் மேலாகப் பொறிக்கப்பட்டு உள்ளன.

எல்லாக் கோயில்களிலும் கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் கொடிமரம் அமைந்திருக்கும். ஆனால் இங்கே, கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது கொடிமரம்..வள்ளி தெய்வானைக்கு திருப்போரூர் திருத்தலத்தில் தனித்தனி சந்நிதி அமைந்துள்ளதும் வேறெங்கும் காண்பதற்கு அரிதான சிறப்பு!

திருப்போரூர் ஆலயத்தில், நவக்கிரக சந்நிதி இல்லை. மாறாக, கந்தஸ்வாமியைத் தரிசித்தாலே சகல கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்!செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள யந்திர முருகனை வழிபடுகின்றனர். மாங்கல்ய பாக்கியம் கிடைக்க இங்கு உள்ள அம்மனை வழிபடுகின்றனர். இங்கு வந்து வேண்டிக் கொண்டால், வேண்டியது விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.

ஐப்பசி பௌர்ணமியில் முருகப்பெருமானுக்கு இங்கே அன்னாபிஷேகமும், சிவராத்திரி நாளில், இரவில் நான்கு கால பூஜையும் விமரிசையாக நடக்கிறது. இங்குள்ள அம்பிகை புண்ணியகாரணியம்மன் எனப் போற்றப்படுகிறாள்.மயில்வாகனனின் வாகனமாக, இங்கு ஐராவத யானை சிலையாக அமைக்கப்பட்டு உள்ளது.

கந்தசஷ்டி விழா இங்கு விசேஷமாக நடக்கும். இந்த வேளையில் கஜமுகன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன், அஜமுகி, தாரகன் ஆகிய அசுரர்களை வதம் செய்வார். மாசி பிரம்மோற்ஸவத்தின் போது, முருகன் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்யும் வைபவம் நடக்கும்.

கந்தசஷ்டி விரத நாளில், அல்லது செவ்வாய்க்கிழமையில், கிருத்திகை மற்றும் விசாக நட்சத்திர நாட்களில், திருப்போரூர் கந்தவேலனை, தரிசியுங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் நிச்சயம்!

திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்களின் விவரங்கள்:

சித்திரை மாதத்தில் தமிழ்வருடபிறப்பு வசந்த உற்சவம். இந்த வசந்த உற்சவவிழாவின் போது திருகல்யாண வைபவம் நடைபெறும். வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம் ஆதிகுருமூர்த்தி சிதம்பரசுவாமி மகாகுருபூஜை ஆவணி மாதத்தில் விநாயக சதுர்த்தி பவித்திர உற்சவம் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா விஜயதசமி பரிவேட்டை உற்சவம் ஐப்பசி மாதத்தில் கந்தர்சஷ்டி விழா காத்திகை மாதத்தில் கார்த்திகை தீபவிழா மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் தை மாதத்தில் தைப்பூசம் மாசி மாதத்தில் பங்குனி உத்திர பெருவிழா போன்ற விழர்க்கள் மட்டுமின்றி மாதத்தில் வருகின்ற. மகா சிவராத்திரி 10 நாட்கள் நடைபெறுகின்ற பிரமோற்சவ விழா பங்குனி மாதத்தில் பிரதோஷம் சஷ்டி கிருத்திகை போன்ற நாட்களிலும் சிறப்பான நிகழ்ச்சிகளாக நடைபெறுகிறது.

கோவில் அமைப்பு :

ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளது. இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர், தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே இத்தல விநாயகரையும், சனீஸ்வரரையும், கந்தசுவாமியையும், பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக் கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது.

ஆலய தலமரமான வன்னி மரத்தின் அருகே வன்மீகநாதர், புண்ணியகாரணி அம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வன்னிமர விநாயகர் சன்னிதிகள் உள்ளன. மேலும் இடும்பன், சூரியன் சன்னிதிகளும் இருக்கின்றன. இத் தலத்தில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல், தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் எழுந்தருளியிருப்பது சிறப்பு அம்சமாகும்.

திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் முதலிய இடங்களில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தூரத்தில் திருப்போரூர் அமைந்துள்ளது.

கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக் கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜா, வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் உள்ளன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், உபதேச மூர்த்தி சன்னிதிகளும் அமைந்துள்ளன.

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்:

அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது, மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் கண்டறிந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இவ்வாறு மறைந்திருந்த அசுரர்கள், முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே இன்றும், கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது.இந்த ஊரில்தான் திருப்போரூர் கந்தசுவாமி திருக் கோவிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் நிர்மாணித்த மகான் சிதம்பர சுவாமிகளின் திருமடம் அமைந்துள்ளது. மதுரையில் சங்கப்புலவர் மரபில் அவதரித்தவர் சிதம்பர சுவாமிகள். இவர் மதுரை மீனாட்சி சொக்க நாதரை அனுதினமும் உள்ளத்தில் இருத்தி தியானித்து வந்தார். மீனாட்சி அம்மனின் மீது கலிவெண்பாவும் பாடியுள்ளார்.

கந்த சஷ்டி


No comments:

Post a Comment